

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
சித்திரை: தமிழ் வருடப்பிறப்பு அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும். அன்றைய தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
வைகாசி: அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
ஆனி: அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
ஆடி: இந்த மாதம் முழுவதும் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலிப்பர்.
ஆவணி: அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
புரட்டாசி: அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மறுநாளில் இருந்து நவராத்திரி கொலுவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். விஜயதசமி அன்று மாலையில் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் கையில் வில், அம்புடன் குதிரை வாகனத்தில் மந்தைவெளியில் எழுந்தருள்வார். பின்பு வன்னிமரத்தின் மீது அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஐப்பசி: அமாவாசை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தீபாவளி அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.
கார்த்திகை: அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். திருவண்ணாமலை தீபத்திருநாள் அன்று உற்சவ அம்மன் மாலை நேரத்தில் பல்லக்கில் வந்து தென்மேற்கு மூலையில் இருந்து திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மனுக்கு தீபாராதனை நடைபெறும்.
மார்கழி: இந்த மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
தை: பொங்கல் அன்று வடக்கு வாசல் அருகில் பெரிய பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கும் அம்மனுக்கும் படைப்பார்கள். அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் நடைபெறும்.
மாசி: மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறும். இம்மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
பங்குனி: அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.