மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்... கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது

கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்... கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது
Published on

மதுரை,

17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

யாகசாலை பூஜைகள்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்க ளுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன.

கங்கை, யமுனை, 1 காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசா லையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வந்தன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தினர். கடந்த 11-ந் தேதியன்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன.

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி. துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மகா கும்பாபிஷேகம்

விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள் தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணியளவில் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

அப்போது அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மனம் முருகி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பக்தி கோஷங்கள் விண்ணதிர முழங்கின. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

மாசி வீதிகளில் குவிந்துள்ள மக்கள், பக்திப் பரவசத்துடன் குடமுழுக்கை கண்டு மனம் குளிர்ந்தனர். கும்பாபிஷேகத்தை கோவிலின் மேல் தளத்தில் இருந்து காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்துள்ளனர்.

10 மணி முதல் பொது தரிசனம்

பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8.10 மணிக்கும், சுந்தரேசுவரருக்கு 8.50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடைபெற்றது. அதன்பின்னர் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு வரை நடைசாத்தப்படாமல் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை காண முடியாத பக்தர்களுக்காக இன்றிரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி, சுந்தரேசுவரர் வீதி உலா வந்து காட்சி அளிக்கி உள்ளனர்.

விழாவையொட்டி கோவிலில் உள்ள 12 கோபுரங்கள், மதில்சுவர்கள், மரங்கள், பொற்றாமரைக்குளம் ஆகிய இடங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. கோபுரங்களில் சிவ சிவ என மின்விளக்குகளால் அழகுற அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பணிகளால் ராஜகோபுரங்கள் பளிச்சிட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. மேலும் அழகு சேர்க்கும் விதமாக ராஜகோபுரங்களுக்கு பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு இருப்பது பக்தர்களை பரவசம் அடையச்செய்துள்ளது. இதே போல் கோவிலின் உள்ளே வாழை தோரணங்களும் அணிவகுத்து கட்டப்பட்டு உள்ளன.

2 லட்சம் பிரசாத பை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வின்போது பக்தர்களுக்கு நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு 2 லட்சம் பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. கோயிலுக்கு செல்லும் வழித்தடங்களை தெரிந்து கொள்ள கியூ ஆர் கோடுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில் 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 26 குடிநீர் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நெரிசலின்றி மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கை நேரலையில் பார்க்க 51 இடங்களில் எல்.இ.டி. மூலம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com