

சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து அம்மனை வழிபடுகிறார்கள். அக்னி சட்டி, அலகு குத்துதல், அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, கரும்புத் தொட்டில் தேர் இழுத்தல், தலைமுடி காணிக்கை என பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
ஆடி, தை, பங்குனி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும் காலகட்டங்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
அவ்வகையில், தை மாத கடைசி வெள்ளி திருவிழவை முன்னிட்டு இன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆற்றுப்படுகையில் பக்தர்கள் கூட்டம் கடல்போல் காட்சி அளித்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
தை கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் இடவசதி, குடிநீர் வசதி, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல முன்னேற்பாட்டு வசதிகளை செய்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.