

காலண்டரில் நட்சத்திரம், திதி, ராகு காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம் மற்றும் விரதங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதில் ‘இஷ்டி காலம்’ என குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்போம். இஷ்டி என்பது பெளர்ணமி அல்லது அமாவாசை திதியின் இறுதிப் பகுதியும், அடுத்து வரக்கூடிய பிரதமை திதியின் முதல் மூன்று பகுதியும் இணைந்த காலம் ஆகும். அதாவது இன்று அமாவாசை அல்லது பெளர்ணமி திதியாக இருப்பின், நாளை இஷ்டி காலமாக இருக்கும்.
இந்த இஷ்டி காலத்தில் கடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூஜைக்குரிய தெய்வமோ அல்லது தேவர்களோ அருகில் வந்து சூட்சமமான ரூபத்தில் நின்று எழுந்தருளி வழிபாட்டை ஏற்றுக் கொள்வார்கள் என ஆன்மிக மற்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
தேவர்கள் நேரில் வந்து ஆசி வழங்கக்கூடிய மிக உன்னதமான நாள் என்பதால், இந்த நாளில் வீட்டு விசேஷம் அல்லது தொழிலுக்கான ஹோமங்கள் செய்தல், உலக நன்மைக்கான ஹோமங்கள், யாகங்கள் செய்யலாம். இந்த நாளில் ஹோமம், யாகங்கள் செய்வதால் அதன் சக்தி பல மடங்கு புண்ணியத்தையும், பலனையும் தரக்கூடியதாக இருக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த நாளில் செய்யக்கூடிய தான, தர்மங்கள், சாதாரண நாட்களை விட அதிக பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.
இஷ்டி காலத்தில் பூஜை, ஹோமம் செய்வதால் சகல தேவர்களின் அருளையும் பெற முடியும். எனவே, இந்த மகத்தான தினத்தில் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்கி, சிறப்பு பூஜை செய்வதன்மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.