சக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா... காரைக்கால் பேட்டை கிராமத்தில் பால்குட ஊர்வலம்

தீமிதி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் பேட்டை கிராமத்தில் பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்
Published on

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் பேட்டை கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே உள்ள பேட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் தீ மிதி திருவிழா கடந்த 7-ஆம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.

பால்குட ஊர்வலம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அரசலாற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி புறப்பட்டனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த அவர்கள், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்த பால் மூலம் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com