வேலாயுதம்பாளையம்: சிவாலயங்களில் அஷ்டமி வழிபாடு

சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமான், கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் (இடம்: நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில்)
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் (இடம்: நன்செய் புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில்)
Published on

கரூர்,

ஆனி மத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேகபாலீஸ்வரர் கோவில்

கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமான், காலபைரவர், மேகபாலீஸ்வரர், பாகவல்லி அம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு அபிஷேக ஆராதனை

அதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேட்டில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com