

நாகை,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கொடியாலத்தூர் ஊராட்சி, கோவில்பத்து வலிவலத்தில் கண்ணாம்பாள் மாரியம்மன் மற்றும் கழனியப்ப அய்யனார் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கிய திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான சக்தி கரகம் எடுத்தல், பால் குட ஊர்வலம் மற்றும் ரதகாவடி ஊர்வலத்தை தொடர்ந்து அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன் ஊர்வலமாக முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
நாகை அருகே பொரவச்சேரி சொர்ண காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 17-ம்தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இவ்விழாவில், நேற்று இரவு துர்க்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை சொர்ண காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் சென்று திருநடனம் மற்றும் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
25-ம் தேதி (சனிக்கிழமை) அம்மன் நடைபாவாடை மற்றும் வெள்ளை உடுத்தி கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.