

மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி கரை தெருவில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ மன்மதீஸ்வரர் ஆகிய 3 கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி குடமுழுக்கு விழா தொடங்கியது.
அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவுற்றதையடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஒரே சமயத்தில் மூன்று கோவில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.