

பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தில் ஸ்ரீ பூரண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ பட்டயத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ கொன்றை மகா காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் கடந்த ஜனவரி மாதம் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று 48-ம் நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்டலாபிஷேக விழாவில் கொன்றைக்காடு, கள்ளங்காடு, காலகம், திருப்பூரணிக்காடு, ஆணைக்காடு, மிதியக்குடிக்காடு, தென்னங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.