

திருவையாறு:
மறைந்த முன்னோர்களுக்கு மாதம்தோறும் வரும் அமாவாசை மற்றும் வருடாந்திர திதி கொடுக்க தவறியவர்கள் மாசி மகம் அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரியில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அவ்வகையில், மாசி மகமான இன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறையான, புஷ்ய மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, அவர்களின் முன்னோர்களை வேண்டி புரோகிதர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், கீரை ஆகியவற்றை தானமாக வழங்கி எள், பச்சரியில் பிண்டம் பிடித்து காவிரி ஆற்றில் விட்டு தர்ப்பணம் செய்தனர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் வழிபட்டனர்.
திருவையாறு அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் இருந்து காலை மாசிமகத்தை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி புஷ்ய மண்டப படித்துறையில் எழுந்தருளினார். தொடர்ந்து காவிரியாற்றில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
பின்னர் சுவாமி , அம்பாள் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.