

ஈரோடு,
தாளவாடி அடுத்துள்ள கோடிபுரம் கிராமத்தில் மாதேஸ்வரா கோவில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாதேஸ்வரா சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு மேளதாளம் முழங்க, சுவாமி கோவில் குளத்தங்கரையை அடைந்தார். பின்னர் இரவு முழுவதும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
காலையில் சுவாமி கோவிலை வந்தடைந்ததும் குண்டம் நிகழ்ச்சி தொடங்கியது. 7 மணியளவில் கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் மலர்கள் தூவப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கி வழிபட்டனர். பூசாரியை தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதல் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.