மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா ரத்து

தொழில் தொடங்கும் நபர்கள், இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்த திட்டமிடுபவர்கள், பத்ரகாளியம்மன் முன்பாக பூ போட்டு உத்தரவு கேட்கும் வழக்கம் இருக்கிறது.
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலின் 2026ஆம் ஆண்டுக்கான ஆடி குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
குண்டம் திருவிழா (கோப்பு படம்)
Published on

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டத்தில், அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபடுகிறார்கள். செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

ஆடி குண்டம் திருவிழா

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பக்தர்கள், பவானி ஆற்றில் நீராடி அதன்பின், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஆடி குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய ராஜகோபுர பணிகள் மற்றும் பாலாலயம் செய்து புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் சிறப்பு

செய்வினை, பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து வனபத்ரகாளியம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போடும் வழக்கமும் உள்ளது.

இதுதவிர புதிதாகத் தொழில் தொடங்கும் நபர்கள், இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்த திட்டமிடுபவர்கள், அம்மன் முன்பாக பூ போட்டு பார்க்கும் வழக்கம் இங்கே இருக்கிறது. சிவப்பு, வெள்ளை ஆகிய நிறத்திலான பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, அம்மனை வேண்டி ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்ப்பார்கள். நாம் மனதில் எந்தப் பூவை நினைக்கிறோமோ, அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டார் என்று நல்ல காரியங்களை தொடங்குகின்றனர். இது இக்கோவிலில் இருக்கும் சிறப்பான பழக்க வழக்கமாகவும், காலங்காலகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகவும் இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com