

நாகை,
நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அம்மன் திருக்கல்யாணம், துகில் தருதல், கிருஷ்ணன் தூது, அர்ஜுனன் தபசு, அரவான் களப்பலி உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெற்றன.
பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீ குண்டத்தின் எதிரே எழுந்தருளினார். விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.