

நாகப்பட்டினம்,
நாகையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாகை ஆரியநாட்டு தெருவில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. முன்னதாக நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியுடன் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
24-ம் தேதி முதல் இன்று காலை வரை யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. யாக சாலை பூஜைகளின் நிறைவில் மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. அதன்பின் காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, 10.30 மணிக்கு அம்பாள் விமானம் மற்றும் மூலவர் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.