

நெல்லை,
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழாவில் காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி முளைக்கட்டு உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பால், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாள் முன்பு கும்பம் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் காந்திமதி அம்பாளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு முளைகட்டிய நவதானிய பயிர்களை அம்பாள் மடியில் நிரப்பி நலுங்கு வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை வரம் வேண்டியும், திருமண வரம் வேண்டியும் வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காந்திமதி அம்பாள் பஞ்ச வாத்தியம் இசைக்க மேளதாளம் முழங்க சுவாமி நெல்லையப்பர் சன்னதிக்கு சென்று எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர், அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பயிர்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.