

தரங்கம்பாடி,
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது ஆலயமான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலம் இது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் காவிரி கரையில் அருள்பாலிக்கும் பஞ்சரங்க ஷேத்திரங்களில் ஐந்தாவது அரங்கமாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் கொடி மரத்துக்கு எதிரே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனை அடுத்து வேதியர்கள் மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கொடி மரத்தில் கருட கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நாளை (27ஆம் தேதி) கருட சேவை, 30ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், 1ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் நிர்வாக செயலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ். குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.