பரமத்திவேலூர்: முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

ஆனி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
ஆனி மாத தேய்பிறை கிருத்திகை.. முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில முருகப்பெருமான்
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகம் கடவுள், பொத்தனூரில் உள்ள பச்சமலை பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர், பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்,

நன்செய் இடையாறு காவேரி கரையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர் மற்றும் ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜாசுவாமி, பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு அபிஷேக ஆராதனை

கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் அருகே உள்ள பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com