

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த பவித்ர உற்சவம், பவித்ர பூர்ணாஹுதியுடன் நிறைவுபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டின் பவித்ரோற்சவம் கடந்த 23-ம் தேதி சாஸ்திர சம்பிரதாயங்களுடன் தொடங்கியது. முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது.
இரண்டாம் நாள் பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, மூலவர்கள் மற்றும் உற்சவ மூர்த்திகள், கருடாழ்வார், வரதராஜ சுவாமி, வகுளமாதா, ஆனந்த நிலையம், யாகசாலை, விஷ்வக்சேனர், யோக நரசிம்மர், பாஷ்யகாரர்கள், கொடிமரம், பலிபீடம், பூவராக சுவாமி, பேடி ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணி முதல் 11 மணி வரை யாகசாலையில் வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூன்றாவது நாளான நேற்று காலையில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் அதன்பின்னர் விசேஷ சமர்ப்பணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பவித்ரோற்சவத்தின் முக்கிய சடங்கான பூர்ணாஹுதி நேற்று மாலை 7 மணியளவில் ஆகம சாஸ்திர முறைப்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து கோவிலை வலம் வந்து மீண்டும் கருவறைக்குள் எழுந்தருளினார். இந்நிகழ்வுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வுகளில் திருமலையின் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.