

மதுரை,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடு எனும் பெருமை கொண்டது மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை மீது உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவில் ஆகும். இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு பாலாலய விழா நடந்தது. அதன் பிறகு திருப்பணி வேலைகள் நடைபெற்றன.
திருப்பணி வேலைகள் நிறைவடைந்தபின்னர் கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டு, யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, காலை 5.15 மணிக்கு மகா பூர்ணாஹுதி நிறைவு பெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தை அடைந்தது. இதையடுத்து 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.