புரட்டாசி முதல் சனிக்கிழமை: குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு

கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் நாளை காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு, கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில்
Published on

கன்னியாகுமரி,

பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று (18.9.2026) பிறந்துள்ள நிலையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் களைகட்டி உள்ளன.

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாக இருந்தாலும், இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக போற்றப்படுகிறது. தீவிர பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமைகளில் தளியல் போடும் வழக்கமும் உள்ளது.

அதேபோல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பெருமாள் சிறந்த வரங்களைத் தந்து அந்த ஆண்டு முழுவதும் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பதும், ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லைகள் நீங்கும் என்பதும் ஐதீகமாகும்.

குமரி வெங்கடாஜலபதி கோவில்

இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை (19-ந்தேதி) ஆகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவிலில் நாளை காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் அதைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர். மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும் அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும் 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும் தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

முக்கிய கோவில்கள்

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியாகுமரி பாலகிருஷ்ண சாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், தேரூர் புதுக்கிராமம் ஸ்ரீதேவி பூதேவி சமேத உதய மார்த்தாண்ட விண்ணகர எம்பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன் சுவாமி கோவில், சிரமடம் பெருமாள் கோவில், கோட்டார் வாகையடி தெரு ஏழகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நாளை சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தரக்கூடிய கோவில்களில், சிரமம் இன்றி வரிசையாக சென்று தரிசனம் செய்ய ஏதுவாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com