சீனிவாசமங்காபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற புஷ்பயாகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

12 வகையான மலர்கள் மற்றும் 6 வகையான புனித இலைகளை கூடை கூடையாக கொண்டு வந்து, சுவாமிக்கு 'அபிஷேகம்' செய்யப்பட்டது.
புஷ்பயாகம்
புஷ்பயாகம்
Published on

திருப்பதி,

திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில், புஷ்பயாக மகோத்சவம் (மலர்களால் செய்யப்படும் யாகம்) நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவான 'அங்குரார்ப்பண' வைபவம், நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை, 'புண்யாஹவாசனம்' (புனிதப்படுத்தும் சடங்கு), 'மிருத்ஸங்கிரஹணம்' (புனித மண் சேகரித்தல்), 'சேனாதிபதி உற்சவம்' (தெய்வீகத் தளபதியின் ஊர்வலம்) மற்றும் 'அங்குரார்ப்பணம்' உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டன.

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம்
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம்

நேற்று காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை, ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனக் கலவை மற்றும் இளநீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் புஷ்பயாகம் எனப்படும் முக்கிய நிகழ்வு பிற்பகல் 2:00 மணி முதல் 4:00 மணி வரை நடைபெற்றது.

சாமந்தி, ரோஜா, அரளி, செண்பகம், மல்லிகை, கனகாம்பரம், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட 12 வகையான மலர்கள் மற்றும் துளசி, வில்வம் பன்னீர் உள்ளிட்ட 6 வகையான புனித இலைகளை கூடை கூடையாக கொண்டு வந்து, சுவாமிக்கு 'அபிஷேகம்' செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

புஷ்பயாகத்திற்காக பக்தர்கள் மொத்தம் 4 டன் மலர்களை காணிக்கையாக வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த மலர்கள் காணிக்கையாகப் பெறப்பட்டன.

புஷ்பயாகத்திற்காக கொண்டு வரப்பட்ட மலர்கள்
புஷ்பயாகத்திற்காக கொண்டு வரப்பட்ட மலர்கள்

சமீபத்தில் நிறைவடைந்த பிரம்மோற்சவ விழாவின்போது அர்ச்சகர்களாலோ, ஆலய ஊழியர்களாலோ அல்லது பக்தர்களாலோ ஏதேனும் அறியாத பிழைகள் அல்லது குறைபாடுகள் நிகழ்ந்திருந்தால், அதற்குப் பிராயச்சித்தமாகவே புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தைச் செய்வதன் மூலம், அத்தகைய சடங்கு ரீதியான குறைபாடுகள் அனைத்தும் நீங்கி, முழுமையாக பரிகாரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

'புஷ்பயாகம்' நடைபெற்றதையொட்டி, நேற்று நடைபெறவிருந்த 'நித்ய கல்யாணம்' (தினசரி திருக்கல்யாண வைபவம்) சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.

Also Read
திருமலையில் அன்னமாச்சாரியார் நினைவுநாள்.. திருவுருவச் சிலைக்கு அபிஷேகம்
புஷ்பயாகம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com