

திருமலை,
திருப்பதி ஏழுமலையானை புகழ்ந்து 32 ஆயிரம் பக்தி சங்கீர்த்தனைங்களை செப்பேடுகளில் எழுதி பாடியவர் தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவரின் 523-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. திருமலையில் லேபாட்சி சந்திப்பில் உள்ள தாளப்பாக்கம் அன்னமாச்சாரியாரின் உருவச்சிலைக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தூப, தீபம், நைவேத்தியம் சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அன்னமாச்சாரியாரின் 12-வது தலைமுறையைச் சேர்ந்த தாளப்பாக்கம் பவன்பாரத்வாஜ், தாளப்பாக்கம் ஹயக்ரீவ நாராயணச்சாரியார், காஞ்சி ராஜேஷ்பிரேம் குமார், பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அபிஷேகத்தின்போது சித்திபேட்டையைச் சேர்ந்த பவன் குழு, விசாகப்பட்டினம் குழு, சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் குழு ஆகியோர் இணைந்து அன்னமாச்சாரியாரின் பக்தி சங்கீர்த்தனைகளை பாடினர்.
அன்னமாச்சார்யாவின் 523வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நேற்று மாலை ஸ்ரீ மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவையின்போது சப்தகிரி சங்கீர்த்தன கோஷ்டி கானம் நடைபெற்றது.