

ராமநாதபுரம்,
ஆவணி பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பவுர்ணமி நாளில் தெய்வ சக்திகள் அதிகரித்து காணப்படும் என்பதால் அந்த நாளில் விரதம் இருந்து குலதெய்வத்தையும் இதர அம்மன் தெய்வங்களையும் வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த பவுர்ணமி நாளில் பெண் தெய்வ வழிபாடு என்பது மக்களுக்கு அதிக பலனை கொடுக்கக் கூடியதாகும். இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு இன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், குறிப்பாக அம்மன் ஆலயங்களில் ஆவணி பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் ராஜகாளியம்மன், மல்லம்மாள் காளி, ருத்ரமாதேவி அம்மன், உதிர காளியம்மன், வெட்டுடையாள் காளியம்மன், முத்துமாரியம்மன், சந்தன மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆவணி பவுர்ணமி அவிட்டம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு ஆவணி பவுர்ணமியானது, ஆவணி அவிட்டத்துடன் வந்ததால் மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
வேதம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த நாளில், வேதம் கற்பவர்கள், பூணூல் அணியும் சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள், சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணிந்து கொண்டனர்.