

திருப்பதி,
ராமானுஜர் போதித்த உபதேசங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஆன்மிக உத்வேகத்தை அளிக்கும், என மேல்கோட்டை ஜக்கு வெங்கடேசன் சுவாமிகள் பேசினார்.
திருப்பதியில் உள்ள அன்னமாச்சாரியார் கலையரங்கில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஆழ்வார் திவ்யப் பிரபந்தத் திட்டத்தின் சார்பில் ‘வைணவ ஆச்சாரியர்களின் ஆன்மிகச் சேவைகள்’ என்ற தேசிய மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் ராமானுஜர், எம்பார், ஆண்டாள், தாசரதி, பராசர பட்டர் மற்றும் பிற ஆச்சார்யர்களின் ஆன்மீக பங்களிப்புகள் குறித்து, அவர்களின் பக்தி மற்றும் கைங்கர்யம் ஆகியவற்றை விளக்கி பல்வேறு அறிஞர்கள் மற்றும் ஆச்சார்யர்கள் உரையாற்றினர்.
இதில் பத்ராசலத்தைச் சேர்ந்த ஸ்தலசாயி சுவாமிகள் பங்கேற்றுப் பேசுகையில், தாசரதி (முதலியாண்டான்) இயற்றிய 'தாட்டி பஞ்சகம்' என்ற நூல் பக்தி, சரணாகதி, ஆச்சார்ய பக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. அதில், இறைவனின் திருப்பாத கமலங்களை சரணடைந்து, ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலுடன் பக்தி மார்க்கத்தில் முன்னேற வேண்டும் என்ற ஸ்தோத்திரம் கூறப்பட்டு இருப்பது நமக்கு ஊக்கமளிக்கிறது, என்றார்.
மேல்கோட்டையைச் சேர்ந்த ஜக்கு வெங்கடேசன் சுவாமிகள் பேசுகையில், ராமானுஜர் தாசரதிக்கு வழங்கிய 10 உபதேசங்கள் பக்தி, சரணாகதி, ஆச்சார்ய நிஷ்டை போன்ற உயர்ந்த மதிப்புகளை எடுத்துரைக்கின்றன. இறைவன் மீது நம்பிக்கை கொள்வதுடன், இறைவனின் பக்தர்களுக்கு சேவை செய்வதையும் புனிதமான கைங்கர்யமாகக் கருத வேண்டும் என ராமானுஜர் போதித்ததாகத் தெரிவித்தார். இந்த உபதேசங்கள் இன்றைய தலைமுறையினருக்கும் மிகுந்த ஆன்மிக உத்வேகத்தை அளிக்கும் செய்திகள், என்றும் குறிப்பிட்டார்.
திருப்பதியைச் சேர்ந்த ஆச்சாரியார் சம்பத்குமார் சுவாமி பேசுகையில், கப்யாசம் ஸ்ருதி குறித்து ராமானுஜர் அளித்த விளக்கம் மிகச் சிறப்பானது, வேத வாக்கியங்களில் உள்ள ஆழமான ஆன்மிகப் பொருளை பக்தர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ராமானுஜர் விளக்கி உள்ளார். இந்த விளக்கத்தில் இறைவனின் தெய்வீகம், அழகு, கல்யாண குணங்கள் பிரதிபலிக்கிறது. என்றார்.
மேல்கோட்டையைச் சேர்ந்த ஆயி நரசிம்மன் சுவாமி பேசுகையில், ஸ்ரீபாஷ்யத்தில் ஜடபரதர் வரலாறு தொடர்பான ஸ்லோகங்கள், அவற்றின் தத்துவ முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. ஜடபரதரின் வரலாற்றின் மூலம் ஆத்ம தத்துவம், உடல் ஆத்மா வேறுபாடு, பக்தி, வைராக்கியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற எடுத்துக்காட்டுகளின் மூலம் வேதாந்த சித்தாந்தங்களை சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்ரீராமானுஜர் விளக்கி உள்ளார்” என்றார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த மரிங்கண்டி குலசேகராச்சாரியார் பேசுகையில், லட்சுமிநாதாக்ய சிந்தெல என்ற அற்புதமான ஸ்லோகத்தை விளக்கி பேசினார். ஸ்ரீமந்நாராயணனின் ஞானக் கடலில் இருந்து நம்மாழ்வார் தத்துவ ஞானத்தைப் பெற்று, அந்த ஞானத்தை ஆச்சார்ய பரம்பரையின் மூலம் படிப்படியாக நமக்கு வழங்கி உள்ளார். அந்த ஆன்மிக ஞானத்தை ஸ்ரீராமானுஜர் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் மேலும் விரிவாகக் கொண்டு சென்றதாக, தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள சமஸ்கிருத வித்யாபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரங்கநாதன் சுவாமி, கோவிந்த பட்டர் (எம்பார்) வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார். ஸ்ரீராமானுஜர் ஆன்மிகப் பயணத்தில் எம்பார் ஆற்றிய சேவைகள், அவரின் ஆச்சார்ய பக்தி, வைணவ சம்பிரதாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர் மேற்கொண்ட பணிகள் குறித்து விளக்கினார்.
மாநாட்டில் ஆழ்வார் திவ்யப் பிரபந்தத் திட்டத்தின் சிறப்பு அதிகாரி திருமழிசை ஆழ்வார் மற்றும் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.