

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2026-ம் ஆண்டுக்கான புகழ் பெற்ற பூச்சொரிதல் விழா மார்ச் 8-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கிய இவ்விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடை கூடையாக பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
இதேபோல் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலின் 5-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில் பூக்களை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். மேலும் முளைப்பாரி, பால்குடம் மற்றும் பூந்தட்டுகளை ஏந்தியபடியும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.