

ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சௌரிபாளையம் கிராமத்தில் புனித மரிய மதலேனாள் ஆலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் திருத்தேர் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினந்தோறும் திருப்பலிகள் நடைபெற்று வந்ததோடு, நேற்று நள்ளிரவில் புனித அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில் புனித மரிய மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனித வனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதர், புனிதமைக்கேல் சம்மன்சு உள்ளிட்ட 5 தேர்கள் ஆலய வளாகத்தை சுற்றி பவனி வந்தன. தேரோட்டத்தில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தேரோட்டத்தின் போது பேய் ஓட்டும் நிகழ்வும் நடந்தது. அப்போது மனக்குறைகள், மனக்குழப்பம், பில்லி, சூனியம் நீங்க வேண்டி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் பின்னோக்கி நடந்து சென்று பிரார்த்தனை செய்தனர். மேலும் திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பங்கு தந்தையிடம் ஏராளமானோர் ஆசி பெற்றனர்.