

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 7 நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.
முதல் மூன்று நாட்கள் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்காவது நாள் நரசிம்மர், ஐந்தாவது நாள் ரங்கநாதர், ஆறாவது நாள் ராமர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் நிறைவு நாளான இன்று மாலை கஜேந்திர வரதர் தெப்பத்தில் எழுந்தருளி, வலம் வந்தார். தெப்பக்குளத்தின் கரைகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர்.
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.