

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெப்போற்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. கோவில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.
முதல் நாளான 26-ம் தேதி சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
27-ம் தேதி ஸ்ரீகிருஷ்ணர், ருக்மினி தேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
28-ம் தேதி உற்சவர்களான மலையப்ப சுவாமி, தாயாருடன் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மார்ச் 1-ம் தேதி உற்சவர்களான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நிறைவு நாளில் (மார்ச் 2) உற்சவர்களான மலையப்ப சுவாமி 7 சுற்றுகள் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோல் பிப்ரவரி 28, மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவையை ரத்து செய்துள்ளது.