சென்னை காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என விண்ணதிர முழங்கியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா
தேரோட்டம்
Published on

சென்னை,

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள், வாகன சேவைகள் நடைபெற்றன.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது. உற்சவர் பவளவண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பிரம்மாண்ட மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பச்சைப் பட்டு உடுத்தி தங்க ஆபரணங்கள் அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் 21 அடி உயர தேரில் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனையைத் தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது.

சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
தேரோட்டம்

பக்தர்கள் உற்சாகம்

மேளதாளங்கள் முழங்க, கோலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை என கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடி கலைஞர்கள் முன்செல்ல, தேர் புறப்பட்டது. பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்து வழிபட்டனர். தேரோடும் வீதியின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று, பகவானை தரிசனம் செய்தனர்.

மேலும் மாட வீதிகளில் உள்ள வீட்டு வாசல்களில் கோலமிட்டும் பகவானை உற்சாகத்துடன் வரவேற்றனர். தேங்காய், பழம், பூ வைத்து அர்ச்சனை செய்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பிரசாதம், குளிர் பானங்கள் வழங்கப்பட்டன. தேர் நான்கு மாட வீதிகளில் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com