

விருத்தாசலம்,
விருத்தாசலம் பெரியார் நகரில் பிரசித்தி பெற்ற பிந்து மாதவ சேத்திரமான ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவங்கள் நடைபெற்றன.
கடந்த 1ந் தேதி ஆறாம் நாள் திருவிழாவின்போது மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 2ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3ந்தேதி வேடுபறி உற்சவமும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரானது விருத்தாசலத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. நாளை மறுநாள் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.