

குத்தாலம்,
மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி எனப்படும் குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காளியம்மன் திருநடன உற்சவம் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு கோவிலின் திருநடன உற்சவ திருவிழா கடந்த 15ஆம் தேதி சக்தி கரகம் எடுத்து காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முதல் நாள் திருவிழாவான இன்று திருக்கோவிலில் இருந்து காளி சிரசுடன் காளியம்மன் வேடமணிந்த பக்தர் ஒருவர் கோவிலில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகள், மேள வாத்தியங்கள் முழங்க, நடனமாடியபடியே முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். வீதியெங்கும் பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவில் வளாகத்தில் படுகளம் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வரும் 30-ம் தேதி திருக்கோவிலில் பந்தல் காட்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சின்ன மற்றும் பெரிய செங்குந்தர் தெருவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.