ஆடித் திருவிழா... 3 கி.மீ. நடந்து சென்று முளைப்பாரியை கடலில் கரைத்த பக்தர்கள்

ஆடித்திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் தவிர பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொண்டி முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, முளைப்பாரி ஊர்வலம்
முளைப்பாரி ஊர்வலம்
Published on

தொண்டி,

தொண்டி முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கடலில் கரைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18ஆம் ஆண்டு ஆடி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் விசேஷ தீபாராதனைகள் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும், வேல் காவடி, பறவை காவடி எடுத்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முளைப்பாரி ஊர்வலம்

அதனைத் தொடர்ந்து அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைபவம், மாவிளக்கு வைத்தல், கிடாய் வெட்டுதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு அம்மனுக்கு கரகம் எடுத்தல், முளை கொட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்தபடி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தொண்டி கடற்கரை சாலையில் உள்ள தீர்த்தக் கரையில் அம்மன் கரகம் மற்றும் முளைப்பாரியை கடலில் கரைத்தனர். அப்போது அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com