

திருமலை,
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் வாகன சேவை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பகவானை தரிசனம் செய்தனர்.
விழாவின் 6-ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில், கோதண்டராமர் திருக்கோலத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதி கேலரிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து பகவானை வழிபட்டனர்.
இன்று மாலையில் தங்க தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பகவானை வழிபட்டனர்.