

திருவள்ளூர்,
திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் பங்குனி பிரம்மோற்சவ வழா நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் உற்சவத்துடன் தொடங்கியது.
நேற்று காலை 6.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்திற்குப்பின், உற்சவர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர், திரு வீதி உலா வந்து அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வரும் 24ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சிறப்பு உற்சவங்களும் விமரிசையாக நடைபெறும். காலை, மாலை இருவேளையும் வேதபாராயணம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி மாலை ரிஷப வாகன வீதியுலா மற்றும் பஞ்சமூர்த்தி தரிசனம் நடைபெறும். 20-ம் தேதி காலையில் ரத உற்சவம் நடைபெறும். 21ஆம் தேதி இரவு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம், 22-ம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவம், 23-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 24ம் தேதி மகா அபிஷேகத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.