இன்று கருட பஞ்சமி... பில்லி சூனியம் நீங்க கருட வழிபாடு

கருட பஞ்சமியில் பால் சம்பந்தப்பட்ட ஏதாவது இனிப்பை கருடனுக்கு நைவேத்யமாக படைக்கலாம்.
கருட பஞ்சமி வழிபாடு (ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட படம்)
கருட பஞ்சமி வழிபாடு
Published on

கருட பகவானின் சிறப்புகளை போற்றி வணங்கும் கருட பஞ்சமி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் கருடனை மனதார வழிபட்டால் கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும், பகை உணர்வு நீங்கும், பக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும், பெண்கள் மாங்கல்ய பேறு பெறுவார்கள் என்பது நம்பிக்கை. கருடனின் பார்வை பட்டால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என துஷ்ட வினைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

நாக சதுர்த்தி கருட பஞ்சமியுடன் தொடர்புடைய அமிர்த கலசத்தை வைத்திருக்கும் கருட பகவானை வழிபடும்போது, தீராத வியாதியும் தீரும் என்பது ஐதீகம். இந்த நாளில் பெருமாள் கோலுக்கு சென்று கருடன் சன்னதியில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்ளலாம். கருடனிடம் வேண்டுதல்களை கூறி பிரார்த்தனை செய்யலாம்.

கருட பஞ்சமி வழிபாடு

வீட்டிலும் எளிய முறையில் பூஜை செய்து கருட பகவானை வழிபடலாம். வீட்டில் கருட பகவான் படம் இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து வாசனை மலர்கள் மற்றும் துளசியால் அலங்கரிக்க வேண்டும். பால் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு இனிப்பு தயார் செய்து, கருடனுக்கு நைவேத்யமாக படைக்கலாம். குறிப்பாக, பால் கொழுக்கட்டை நைவேத்யம் செய்வது விசேஷம். கொழுக்கட்டை செய்ய முடியாவிட்டால் பால் பாயாசம் வைத்தும் வழிபடலாம்.

வீட்டில் கருடன் படம் இல்லாவிட்டால் கவுரி மாதாவை இந்த நாளில் வழிபடலாம். கவுரியை வழிபட்டுதான் கருடனின் தாயார் நலன் பெற்றார். எனவே, கவுரி மாதாவை வழிபட்டால் கவுரி மாதாவின் அருளுடன், கருட பகவானின் அருட்பார்வையும் கிட்டும்.

திருஷ்டி நீங்க ரட்சை கயிறு

மேலும், திருஷ்டி நீங்குவதற்கு எளிமையான ஒரு விஷயத்தை செய்யலாம். ஒரு சிவப்பு கயிறு எடுத்து, அதில் 10 முடிச்சு போட்டு அம்பாளின் திருவுருவப்படத்திற்கு, அம்பாளுக்கு வலது பக்கம் வைத்து, அதன்பின்னர் பூஜையை தொடங்கவேண்டும்.

கருடனுக்கு உரிய மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யலாம். மந்திரங்கள் தெரியாவிட்டால் விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி வழிபடலாம். அதன்பின் நைவேத்யம் சமர்ப்பணம் செய்து, தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்தபின் அந்த கயிறை (ரட்சை கயிறு) எடுத்து கையில கட்டிக்கொள்ளலாம். திருஷ்டி கழிவதற்கு மட்டுமின்றி, பில்லி, சூனியம் ஏவல், செய்வினை போன்ற பயத்தில் இருப்பவர்களும் இந்த கயிற்றை கட்டிக்கொள்ளலாம். இதன்மூலம் கவுரியின் அருளாசியால் பயம் நீங்கி தைரியம் ஏற்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com