

உவரி,
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் மிகவும் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும். இக்கோவிலில் சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார். ஆண்டுதோறும் இங்கு வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் உச்சிகால பூஜை. இரவு 1008 சுமங்கலி பூஜை, சமய சொற்பொழிவு, இசை பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடக்கிறது.
30-ந் தேதி (சனிக்கிழமை) விசாகத் திருநாள் அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாசக முற்றோதுதல், இரவு சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பக்தி இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 1 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும், மகர மீனுக்கு காட்சி கொடுத்தலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். விழா நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.