

தென்காசி,
தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வருண கலச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர், தேரையரால் வழிபடப்பட்ட ஸ்தலம். இங்கு தமிழ் மாத கடைசி வெள்ளிதோறும் சிறப்பு அபிஷேகம், மற்றும் விவசாயம் செழிக்கவும் விவசாயிகளின் வாழ்வு சிறக்கவும் வருண கலச பூஜை நடைபெறும்.
அவ்வகையில் இன்று (11-ந் தேதி) கடைசி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. காலையில் தோரணமலை அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகருக்கும், மலைமீதுள்ள முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
இதனை அடுத்து பக்தர்களால் 21 கலசங்களில் மலை மீது உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கலையரங்கத்தில் வைத்து உற்சவ மூர்த்திகளான முருகன், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் தீபாராதனை மற்றும் வருணகலச பூஜை நடந்தது. முருகன் துதிப்பாடல்கள் பாடப்பட்டன.
இதனை அடுத்து பக்தர்கள் மலர் தூவி உற்சவரை வணங்கினர். அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு காலை மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
தோரணமலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு போட்டித் தேர்வு எழுதுவோருக்கு இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. குறிப்பாக குரூப்-3 மற்றும் குரூப் 2ஏ, குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தோரணமலை நிர்வாகம் மற்றும் அண்ணாமலை ஐ.ஏ.எஸ். அகாடமி இதனை நடத்துக்கிறது.