

விழுப்புரம்,
வளவனூர் அருகே ஓட்டேரி பாளையம் ஐயனாரப்பன் திருக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே ஓட்டேரி பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூரணி ஸ்ரீ பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத சிறப்பு நிகழ்வாக, ஸ்ரீ பொற்கலை, ஸ்ரீ பூரணி சமேத ஸ்ரீ ஐயனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீ பொற்கலை, ஸ்ரீ பூரணி சமேத ஸ்ரீ ஐயனாரப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு ஹோமங்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதன் பின்னர் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.