

திருவள்ளூர்,
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூரில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி சென்று வீட்டில் பூஜை செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.
விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, ஆப்பிள் பழம், ஆரஞ்சு பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கம்பு கதிர், மக்காச்சோளம், கரும்பு, படையலுக்கு தேவையான எருக்கம்பூ மாலை, குருத்தோலை, மாவிலை தோரணங்கள், வாழை இலை, தேங்காய், விநாயகர் சிலைக்கு ஏற்ற கலர் காகிதத்தால் செய்யப்பட்ட குடைகள் ஆகியவற்றை வாங்கி சென்று வீட்டில் பூஜை செய்து வழிபட்டனர்.
திருத்தணி சுப்ரமணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பாச்சூர் அருள்மிகு தங்காதலி உடனுறை ஸ்ரீ வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 11 விநாயகர் சிலைகள், ஒரே இடத்தில் உள்ளன. அந்த சன்னிதி, செல்வ விநாயகர் சபை என அழைக்கப்படுகிறது. அந்த சன்னிதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை அணிவித்து ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருவள்ளூர் ஜெயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.