

ஏரல்,
ஏரல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் ஏரல் காந்தி சிலை அருகில், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெரு, உமரிக்காடு, ஆலடியூரர் அகரம், கொற்கை, கொற்கை மணலூர், சிறுத்தொண்டநல்லூர், பண்ணைவிளை புதூர் ஆகிய 9 இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.
இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து 9 விநாயகர் சிலைகளும் ஏரல் பஸ் நிலையம் அருகில் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலம் ஏரல் மெயின் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தாமிரபரணி ஆற்றை சென்றடைந்தது. அங்கு வாகனங்களில் இருந்து இறக்கப்பட்ட சிலைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டன. விநாயகர் ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர்.