

மண்டியா:
பெண் கொலை
மண்டியா தாலுகா கிக்கேரி அருகே மைசூரு-சென்னராயப்பட்டணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் புஷ்பலதா(வயது 45). இவரது கணவர் ஸ்ரீகாந்த், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து புஷ்பலதா, கணவர் நடத்தி வந்த மருந்துக்கடையை தொடர்ந்து நடத்தி வந்தார். இவருக்கு உதவியாக அதே கடையில் ராஜ்குமார் (27) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த புஷ்பலதா கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். ஆனால் புஷ்பலதாவை கொன்ற மர்மநபர்கள் யார், எதற்காக அவரை கொன்றனர் என்பது தெரியவில்லை. இதற்கிடையே மருந்துக்கடையில் ஊழியராக வேலைப்பார்த்த ராஜ்குமார் தலைமறைவாக இருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர்.
வாலிபர் கைது
இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான், புஷ்பலதாவை கொன்றதாக தெரிவித்தார்.
பரபரப்பு தகவல்கள்
மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது புஷ்பலதாவின் கணவர் ஸ்ரீகாந்த் இறந்த பின்னர் மருந்துக்கடை மற்றும் அவரது சொத்துகள் தொடர்பான அனைத்து வரவு, செலவு கணக்குகளையும் ராஜ்குமார் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடனை அடைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மாந்தோப்பு ஒன்றை விற்பனை செய்ய ராஜ்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கு புஷ்பலதா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆந்திரம் அடைந்த ராஜ்குமார் புஷ்பலதா வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.