கிருஷ்ணா நதிநீர் வருகையால்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 8.6 டி.எம்.சி.யாக உயர்வு

கிருஷ்ணா நதிநீர் வருகையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 8.6 டி.எம்.சி.யாக உயர்ந்து உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் வருகையால்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 8.6 டி.எம்.சி.யாக உயர்வு
Published on

சென்னை,

சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் இருந்து பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, பூண்டி ஏரி 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி (3.2 டி.எம்.சி.) ஆக உள்ளது. இதன் நீர்மட்டம், 35 அடியாகும். மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் இதன் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

தமிழகம் - ஆந்திரா மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் படி, கடந்த ஜூன் 17-ந்தேதி, கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்திற்கு நீர் வந்து கொண்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் 2.5 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது.

ஏரிகளின் நீர்இருப்பு

பூண்டி 2 ஆயிரத்து 201 மில்லியன் கன அடி (2.2 டி.எம்.சி.), சோழவரம் 615 மில்லியன் கன அடி, புழல் 2 ஆயிரத்து 552 மில்லியன் கன அடி (2.5 டி.எம்.சி.), கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை 486 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் 2 ஆயிரத்து 455 மில்லியன் கன அடி மற்றும் வீராணம் ஏரியில் 359.40 மில்லியன் கன அடி உள்பட 8 ஆயிரத்து 668.40 மில்லியன் கன அடியாக (8.6 டி.எம்.சி.) ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 554 கன அடியும், சோழவரம் 10, புழல் 163 கன அடி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை 15 கன அடி, செம்பரம்பாக்கம் 160 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர பூண்டிக்கு 561 கன அடியும், புழல் 250 கன அடி, கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை 25 கன அடி, செம்பரம்பாக்கம் 160 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

எப்படியும் இந்த காலகட்டத்தில் ஏரிகளின் நீர் இருப்பு சராசரியாக 11 டி.எம்.சி. என்ற அளவில் சேமிக்க வாய்ப்பு உள்ளது. சராசரியாக மாதம் 1 டி.எம்.சி. வரை குடிநீர் தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது 8 டி.எம்.சி. இருப்பு இருப்பு இருப்பதால், அடுத்த 8 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com