

புதுடெல்லி,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) மூலம் இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்திய காவல் பணி (IPS) உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக, சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதன்படி கடந்த ஆண்டு மே 25-ந்தேதி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து பிரதான தேர்வுகள் ஆகஸ்ட் 22 முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றன. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான நேர்காணல் தேர்வுகள் பிப்ரவரி 27-ந்தேதியோடு நிறைவடைந்தன.
இந்த நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 968 பேர் சிவில் சர்வீஸ்(IAS, IPS, IFS) பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி அனுஜ் அக்னிஹோத்ரி, ராஜேஸ்வரி சுவே, ஆகாஷ் துல் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர். இதில் 2-வது இடத்தைப் பிடித்த ராஜேஸ்வரி, தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்கள் வரை மதிப்பெண்களை இணையதளத்தில் பார்க்க முடியும் எனவும், மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 23385271/23381125/23098543 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.