ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் என்ஜினீயர் குத்திக்கொலை

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் என்ஜினீயரை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம கும்பல் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டது.
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் என்ஜினீயர் குத்திக்கொலை
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சிவா என்ற மணிகண்டன்(வயது24). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தெருவில் உள்ள இரும்பு கடையின் அருகில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்களை கொண்ட மர்ம கும்பல் சிவாவை சரமாரியாக தாக்கிவிட்டு வாள் மற்றும் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதை கண்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தடுக்க வந்தபோது அவரையும் தள்ளிவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றுவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுஉள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார் என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் புளிக்காரத்தெரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்தாராம்.இதனை அறிந்த சிவா தரப்பினர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளதால் அந்த கண்ணோட்டத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com