

பொன்னேரி,
பொன்னேரி வருவாய் துறை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் நடைபெற்றது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழக அரசால் அறிவித்து வழங்கிவரும் மானிய திட்டங்கள் இதுவரை எங்களுக்கு கிடைக்க வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் விவசாயிகளுக்கான திட்டங்களை தெரிந்து கொள்ள இயலவில்லை.
ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு போன்றவற்றில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஏரிக்கரை உடைப்பாலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளப்பெருக்கில் கரை உடைப்பிற்கும் நீர்வளத்துறையினர் இதுவரை சரியான தீர்வு காணவில்லை. இனிமேல் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், உரம், மரம், செடிகள், சொட்டுநீர் பாசன மழைத்தூவான், கரும்பு விவசாயிகளுக்கு மானியம் போன்றவற்றை அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து விவசாயிகள் அதிரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்.டி.ஓ. செல்வம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் பேசுகையில்,
மானிய உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள், தாவர விதைகள் பற்றிய விவரங்களையும் அரசு நிர்ணயித்த மானிய விலையை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை அரசுக்கு அதிகாரிகள் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.