

வில்லியனூர்
ஆசிரியை இடமாற்றத்தை திரும்ப பெறக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தினர்.
ஆசிரியை இடமாற்றம்
வில்லியனூர் கொம்யூன் அகரம் கிராமத்தில் வட்டம் 5-ல் அரசு தொடக்கப்பள்ளி 40 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆசிரியை அனிதாவின் தலைமையில் 4 ஆசிரியர்களோடு பள்ளி இயங்கி வருகிறது. இச்சூழலில் தற்போது கல்வித்துறையால் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் ஆசிரியை அனிதாவும் ஒருவர் ஆவார்.
பணியிட மாற்றம் முறை நியாயமானது என்றாலும் பள்ளியில் இதுவரை இல்லாத அளவில் அரசு ஒதுக்கிய 2 வகுப்பறையின் குறுக்கே திரை அமைத்து அதற்குள் எல்.கே.ஜி. முதல் 3-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளுக்கு ஈடாக கற்றல் முறையை அவர் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் போராட்டம்
இந்தநிலையில் ஆசிரியை அனிதாவின் இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி நுழைவாயிலில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணியிடம் மாற்றம் சம்பந்தமாக சந்திக்க சென்ற போது பெற்றோர்களை அவமதித்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆசிரியை இடமாறுதலுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராட்டம் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.