கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஒரே தளமாக தேசிய தொழில் சேவை இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது வேலைவாய்ப்பு தொடர்பாக உறுப்பினர்களின் துணைக்கேள்விகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பணிகளில் வேலைவாய்ப்பு முகாம்களும் ஒன்றாகும். அந்த வகையில் கடந்த ஓராண்டில் ஒட்டுமொத்தமாக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் நாடு முழுவதும் மொத்தம் 2.22 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளன.

நாட்டில் வேலைவாய்ப்பு தலைமுறை அதிகரித்து, வேலையின்மை விகிதம் (3.2 சதவீதம்) குறைந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 11.49 லட்சம் வேலைகள் அரசு துறைகளில் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஒரே தளமாக தேசிய தொழில் சேவை இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது.

55 லட்சம் நிறுவனங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து மாநில அரசு தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 6 கோடிக்கு அதிகமான வேலை தேடும் இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளில் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com