பச்சை தேயிலை பறிக்கும் பணிகள் மும்முரம்

கூடலூரில் பரவலாக மழை பெய்து வருவதால், பச்சை தேயிலை பறிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பச்சை தேயிலை பறிக்கும் பணிகள் மும்முரம்
Published on

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் வெயிலும், இரவில் பனிபொழிவும் உள்ளது. இதனால் வறட்சியான காலநிலை நிலவுவதால் வனப்பகுதி பசுமை இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளைகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மேலும் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்புகிறது. மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் பசுந்தீவன தட்டுப்பாடு பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது. இதேபோல் வறட்சியான காலநிலையால் தேயிலை தோட்டங்கள் உள்பட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது பெய்து வரும் கோடை மழையால் தேயிலை தோட்டங்கள் மீண்டும் பசுமையாக காட்சியளிக்கிறது.

மேலும் தேயிலை செடிகளில் மகசூல் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்தும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வறட்சியால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை பரவலாக பெய்து வருவதால் தேயிலை செடிகளுக்கு உகந்த காலநிலை காணப்படுகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூலும் அதிகரித்துள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com