

ரத்த அழுத்தம் என்பது , இதயம் சுருங்கி, விரியும்போது ஏற்படும் அழுத்தத்தை குறிக்கும். இதயத் தசைச் சுருங்கி, மகாதமனி, இடது வென்ட்ரிகிளிலிருந்து ரத்தத்தை பம்ப் செய்யும் போது ஏற்படும் அழுத்தம் "சிஸ்டாலிக் ரத்த அழுத்தம்" ஆகும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும்போது மேலே குறிப்பிடுவது சிஸ்டாலிக் அழுத்தமாகும். ரத்தத்தை உடம்பெங்கும் அனுப்பச் சுருங்கிய இதயதசைகள் மீண்டும் விரிவடையும் போது ஏற்படும் ரத்த அழுத்தம் "டயஸ்டாலிக் ரத்த அழுத்தம்" ஆகும்.
பொதுவாக, ரத்த அழுத்தமானியில், ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் போது, மேலே, கீழே முறையே 120/80 மி.மீ. எச்ஜி என்ற அளவில் ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அளவுகள் சிறிதளவு குறைவாக அல்லது அதிகமாக இருப்பது இயல்பானது தான். ஆனால் 140/90 மி.மீ. எச்ஜி அல்லது அதற்கு மேல் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தமாக (Hypertension) கருதப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை முறையாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் ரத்தக்குழாய்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து, ரத்தக்குழாய் சுவர் கடினமடைந்து ரத்த குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். "பக்கவாதம்" ஏற்பட உயர் ரத்தஅழுத்தம் முக்கிய காரணமாக அமைந்துவிடும். உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகங்கள் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
உயர் ரத்த அழுத்தம் என்பது பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் உடலை பாதிக்கும் ஓர் ஆபத்தான நோய் என்பதால் வந்தபின் சிகிச்சை அளிப்பதை விட வரும்முன் காப்பது நல்லது.
1. உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரை மூன்றையும் சரியான அளவில் எடுக்க வேண்டும். இவற்றை சற்றுக் குறைத்து எடுத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
2. சீனி, உப்பு, மாவுப் பொருட்கள், எண்ணெய் இந்த நான்கையும் அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. பதப்படுத்தப்பட்ட டின் உணவுகள், அப்பளம், ஊறுகாய், கருவாடு, இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
4. உடற்பயிற்சி - நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீந்துதல், பேட்மிண்டன் போன்று ஏதாவதொரு உடற்பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்வது நல்லது.
5. புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
6. மதுவின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது, ரத்த ஓட்டமும், அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே, ரத்த அழுத்த நோயாளிகள் மதுவையும் தவிர்ப்பது நலம்.
7. மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 அமிலம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே மீனை குழம்பு வைத்து சாப்பிட வேண்டும்.
8. பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், வாழைப்பழம், பேரீச்சை, கொய்யாப்பழம்.. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
9. பன்னீர் திராட்சையை தோல் மற்றும் விதையுடன் ஜூஸாக குடிக்கலாம். திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் உள்ள "ரெஸ்வெராட்ரோல்" இதயத்திற்கு நல்லது.
10. கால்சியம் சத்து நிறைந்த பால், முட்டை வெண்கரு, கீரைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், வெண்டைக்காய் இவைகளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
11. மன அழுத்தம், மனக்கவலை நீங்க அவரவர் சார்ந்த நம்பிக்கையின்படி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யலாம்.
12. பிரணாயாமம் முறைப்படி செய்து வர ரத்த சுற்றோட்டம் சீராகும்.
13. இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் இடையூறின்றி தூங்க வேண்டும்.