

உடல் ஆரோக்கியத்துக்கு 3 வேளையும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் குறிப்பாக இரவு உணவை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. முன்னதாகவே சாப்பிடும் பழக்கம் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த நேரத்திற்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டியது அவசியம்.
இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கோதுமை ரவை கிச்சடி அல்லது இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதற்குப் பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
40 வயதைக் கடந்தவர்கள் சிறுதானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி வடிவில் சமைத்து உண்பது சிறந்தது. ஆரம்பத்தில் இதுபோன்ற உணவு பழக்கத்தை கொண்டு வரும்போது பசி எடுக்கலாம். அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால், கனமான உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பழங்களைச் சாப்பிடலாம்.
குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் டாக்டர்கள்.